நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

14522790_1394778983873387_3796922250364742790_n-2

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து

வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் நம்மை வாழ்நாள் முழுவதும் எங்கேங்கோ இழுத்துச் செல்கின்றது. பதில்களின் ஊடாக ஞானக்கீற்று பெறத் தேடித் தேடி களைத்துப்போய் கிடைத்ததைப் பதிலாக்கிக் கொண்டு திரும்புவதுதான் இன்றைய பெரும்பாலோரின் அனுபவம். பதில் யாரிடமிருந்து பெற்றோம் என்கிற ஒன்றே நம்மைத் திருபதிப்படுத்திவிடுகிறது; அல்லது காலம் முழுவதும் மெச்சிக் கொள்ள ஒரு சமாதானத்தை வழங்கிவிடுகிறது.

அறிதலைச் சாத்தியப்படுத்த பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தர்க்கம் செய்து அறிவது. அதனையே தத்துவத்தின் செயல்பாடு என்கிறார்கள். தத்துவம் என்பதன் உள்பொருள் தர்க்கம் செய்து ஒன்றை அறிந்து கொள்வது. இது அனைத்துத் துறைகளிலும் சாத்தியம். வாழ்க்கையை அறிந்து கொள்ள நமக்குள் பெருக்கெடுக்கும் கேள்விகளின் பின்னால் நாம் ஓடுகிறோமே தவிர அதனைத் தத்துவ தளமாக மாற்றிக் கொள்வதில்லை; அதனைத் தர்க்கம் செய்வதில்லை.

ஆகவே, நம் கேள்விகளைக் கொண்டு நிறைய பேர் ஆங்காங்கே மடத்தை அமைத்து குருக்களாக உட்கார்ந்துவிட்டார்கள்; எது என் கர்மவினை? நான் செய்த பாவம் என்ன? என் முற்பிறவி என்ன? ஏன் இத்தனை சிரமத்தை எதிர்நோக்குகிறேன்? என்கிற நம் கேள்விகளை முதலீடாகக் கொண்டு பல மத நிறுவனங்கள் வணிகத்தில் தழைத்தோங்கிவிட்டன. நம் கேள்விகளைக் கொண்டு பல நூல்கள் இயற்றப்பட்டுவிட்டன. ஆனால், கேள்விகள் கேள்விகளாகவே தலைமுறை தலைமுறையாக அலைந்து கொண்டிருக்கின்றன.

என் தாத்தாவின் கேள்விகளுக்குக் கிடைத்த பதில் என் அப்பாவைத் திருபதிப்படுத்தவில்லை, ஆகவே அவரும் கேள்விகளோடு அலைந்தார். அவருக்குக் கிடைத்த பதில்கள் என்னை எப்பொழுதுமே திருப்திப்படுத்தியது இல்லை. ஆகவே, எனது இளமை பருவத்திலும் நான் கிருத்துவம், புத்தம், கிருஷ்ணர் என அலைந்தேன். இப்பொழுது எனக்கும் பதில் கிடைத்ததா எனத் தெரியவில்லை. ஆனால், பயங்கரமான அயர்வு ஏற்பட்ட கணம் நான் ஏதோ ஒரு புரிதலுடன் காரியங்கள் ஆற்ற வாழ்க்கைக்குள் திரும்பி வந்துவிட்டேன். என்றாவது என் மகன் கேட்கும்போது, அவனுக்கும் என்னைப் போல கேள்விகள் எழும்போது எனக்குக் கிடைத்த பதிலையே அவனுக்குச் சொல்வேன். அவன் அதில் திருப்தி அடையவேண்டும் என்பதற்காக அல்ல; எல்லோரும் தேடித் தேடிக் களைத்தவர்கள் எனும் ஓர் உண்மையை உணர்த்துவதற்காக. எப்படியிருப்பினும் நாம் நடைமுறைக்குள் வாழ்வதற்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதுவொரு நிம்மதியற்ற அகப்போராட்டம்.

தன் வாழ்நாளில் கொக்களித்துப் பெருகும் துயரங்களின்போதும் இடையூறாமல் துரத்தும் பிரச்சனைகளின் முடிவில்லா அலைக்கழிப்புகளின்போதும் மனம் சட்டென கேள்விகளால் சூழ்ந்து கொள்கிறது; கேள்விக்கு விடையில்லாமல் மறைந்தும்விடுகிறது. இத்தகு மனித மனங்களின் விடையில்லா கேள்விகளின் இடைவேளிக்குள் நுழைவதுதான் மதம், உளவியல், தத்துவம், ஆன்மீகம், இலக்கியம் ஆகியவற்றின் முதன்மையான செயல்பாடு. இவையனைத்திற்குமான கவனம் இதுபோன்ற அடிப்படை கேள்விகளின் வழியே உருவாகியது. வாழ்வைச் சிந்தித்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னிடமிருந்தே பிறந்திருக்கின்றன. தனக்கு ஏன் இத்துயரங்கள்? தான் ஏன் வேதனைப்பட வேண்டும்? தனக்கு எதற்கு இந்தப் பிறப்பு என கேள்விகளின் நீட்சி அபூர்வமானவை. ஆனால், இதற்கான பதில்கள் காலச்சூழலுக்கும், உரைப்பான் குறித்த ஞானம்பொருட்டும் இப்படிப் பற்பல நியாங்களுக்குட்பட்டது. ஆகக் கடைசியான கேள்வி, உன் கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா என்பதே தவிர உன் கேள்விக்கேற்ற பதில் கிடைத்ததா என்பதில் இல்லை. அதை அத்தனை உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை.

gita-2

 

நீங்கள் கீதை படித்திருக்கிறீர்களா? நீங்கள் வேதம் கற்றிருக்கிறீர்களா? நீங்கள் பைபிள் படித்திருக்கிறீர்களா? நீங்கள் அதைப் படித்திருக்கிறீர்களா? நீங்கள் இதைப் படித்திருக்கிறீர்களா? எனக் கேட்டுக் கொண்டே போகலாம். நாம் எல்லாவற்றையும் படித்திருக்கலாம். நம்முடைய தேடல் நம்முடைய வாழ்க்கைக்குள்ளிருந்து எழுந்த கேள்விகள்பால் உருவானது. அக்கேள்விகளுக்குத் தீனி போடுவதற்காகத் தொடர்ந்து தேடுகிறோம். குருமார்களிடம் செல்கிறோம், நூல்கள் வாசிக்கிறோம். ஒரு நாள் மிகப்பெரிய அயர்ச்சி; சோர்வு தோன்றும். ஏன் இதைத் தேடி வந்தோம் என்கிற சலிப்புத் தட்டும். ‘ப்ராய்ட்’ செயலூக்கத்தைப் பற்றி விவரிக்கும்போது செயல்களுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஒன்று பிரக்ஞை. அக்கணம் அச்செயல்கள் மீது படிந்திருக்கும். ஆனால், சட்டென ஆழ்மனம் விழித்தெழும்போது அச்செயல்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டத் துவங்கும். பின்னர் நமக்கு இயல்பாகவே சோர்வுமனம் தோன்றும். இப்படிப் பலர் அனுபவப்பட்டிருக்கலாம். ஆழ்மனம் பற்றி வேதாந்தமும் பிராய்ட்டும் சொல்வதைப் போல அது மிக நீண்ட பதிவுகள் கொண்டது. பிரக்ஞை இக்கணம் தோன்றுவது; அதற்குக் கடந்தகால பதிவுகள் அநாவசியம். இதனால்தான் ஆழ்மனத்திற்கும் பிரக்ஞைக்கும் முரண்பாடுகள் தோன்றிய வண்ணமே இருக்கும். சட்டென செயலில் மனம் ஒட்டாமல், மனம் என்னவோ செய்கிறது எனப் புலம்பத் துவங்கிவிடுவோம்.

இத்துடன் நம் தேடல் போதும் என நாம் முடித்துக் கொள்வது நமக்குக் கிடைத்த பதில்களினால் அல்ல. நம் உயிருக்குள் உருவாகிய ஒருவகையான ஆழ்மனத் தூண்டல்; அல்லது சோர்வு. கிடைத்தவரை அதுதான் தனக்கான பதில் என அதனைத் தூக்கிக் கொண்டு வாழ்க்கைக்குள் சமாதானம் ஆகிவிடுகிறோம்; அதையே ஜெயமோகன் கடவுளைத் தேடி அடையமுடியாமல் போன இடங்களில் மதம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்கிறது என்கிறார்.

பல மதக்குருக்களிடம் சென்று கற்று ஏதோ ஒரு வயதில் அதன்மேல் ஈர்ப்புக் கொண்டு எனக்கு என் கேள்விகளுக்கான விடை கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கையில் திளைத்து பிறகு மீண்டும் கேள்விகள் எழ, மீண்டும் வேறு இடம் நோக்கி ஓடிய பற்பல அனுபவங்கள் எனக்குண்டு. இதுபோன்று பலரும் கடந்து வந்திருப்போம். ஏன் இத்தனை அலைச்சல்? உனக்கு ஏன் பதில் தெரிய வேண்டும்? நீதான் பதில். உனக்குள்ளே பதில் உண்டு. நீ வாழும் வாழ்க்கையும் நீ வாழ்ந்த வாழ்க்கையும்தான் உன் எதிர்காலத்தையும் உன் பலனையும் தீர்மானிக்கிறது, அதைக் கண்டு ஏன் மிரள்கிறாய்? அதைக் கண்டு ஏன் தடுமாறுகிறாய்? எனத் தோளில் தட்டி உரையாடுகிறது சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய ‘தனியன்’ நூல்.

 

asramam-5

இந்தத் ‘தனியன்’ நூல் தொடர் உரையாடல் எதையும் சாத்தியப்படுத்தும்; ஓயாமல் அலையடிக்கும் மனத்தைக் கொஞ்சம் அமைதிப்படுத்தும் என்று நம்புகிறேன். ‘தனியன்’ நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைகள் குறித்தும் தொடர்ந்து உரையாடுவதற்கான வாசல் திறந்துவிடப்பட்டுள்ளது. பலநாள்களுக்குப் பிறகு ஆன்மீகம் குறித்த எனக்குள் இருக்கும் அந்தத் தனியனை இந்த நூல் தட்டியெழுப்பியுள்ளது என்பேன். ஏதோ ஒரு சமாதானத்தில் உறைந்துகிடந்த பல கேள்விகளை இந்த நூல் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. பதிலைத் தேடுவதைவிட கேள்விகள் குறித்து உரையாடுவதே ஆகச் சிறந்த செயல்பாடு எனத் தனியன் உணர்த்தியுள்ளது. கேள்விகளின் சாரங்களைத் தொகுத்துப் பார்க்க தனியன் நூல் எனக்கொரு வாய்ப்பை அளித்துள்ளது. இதுவே சர்வ பூரணம் எனச் சொல்ல மாட்டேன். மனித மனம் அத்தனை எளிதில் சமாதானம் ஆகிவிடாது.

புத்தர் அதனால்தான் மனசாட்சியைப் பற்றி முற்றிலும் துறக்க வேண்டும் என்கிறார். பிரக்ஞை மட்டுமே போதும். நீ இப்பொழுது இருக்கிறாய் என்கிற பிரக்ஞை மட்டுமே போதும். மனசாட்சி உன்னை நிம்மதியாக வாழவிடாது. உன்னைத் துரத்திக் கொண்டே இருக்கும். ஆனால், அப்படி வாழ நேர்ந்தால் உலகம் நம்மை மனசாட்சி இல்லாதவன் என இகழ்ந்து பேசும் அல்லவா?

‘நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்’ என சுவாமி தன் தனியன் நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். நெருக்கடிகளை விட்டு உன்னால் தப்பிக்க முடியாது; ஆகவே, அதனை எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற ஒரு பக்குவத்திற்கு வர உன்னை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது வேதாந்தம்.

வேதாந்தம் நம்முடைய பூர்வீகமான கேள்விகளுக்குப் பதில்களைத் தந்து நம்மை ஆற்றுப்படுத்தும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அது நம்மை யார் என்று நமக்கு உணர வைக்கும். உலகில் தோன்றிய மற்ற அனைத்து நூல்களும் அதனைத்தானே செய்கிறது எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்? எடுத்துக்காட்டாக, திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை எல்லாம் மனித சிந்தனைக்கான திறவுக்கோல் என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால், அவையாவும் என்னால் அற நூல்களாக மட்டுமே சிந்திக்க முடிகிறது. அற நூல்களின் மிக ஆதாரமான செயல்பாடு நம்மிடையே நம்பிக்கைகளை விதைப்பதுதான். நம்மை ஆசுவாசப்படுத்தி இலட்சியவாத சிந்தனைகளை நமக்குள் விதைக்கும் வேலையைத்தான் அவை செய்கின்றன. திருக்குறள் ஒருவகையில் சிறந்த அற நூலாகவே நான் கருதுகிறேன். திருக்குறளின் தொனி வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கைக்கு அப்பாலும் தொடரும் விடையில்லா நம் கேள்விகளின் முன்னே பதிலாக மாறுவது அல்ல; கேள்விகளுக்கு அப்பால் இப்பொழுதிருக்கும் உலகை நோக்கி நடைப்போட புத்திப் புகட்டும் இருப்பாக மாறுவது. இதனைச் செய்; இது நடக்கும். இதனைச் செய்யாதே இது நடக்கும். என உபதேசத் தளத்தில் மிகப் பாரம்பரியமான நிலைத்தன்மையுடன் நின்று கொண்டு வாழ்க்கையை நோக்கி நம் அறிதலுக்கு வழிகாட்டுகின்றது.

28-1385645154-buddha3434-600-jpg

வேதாந்தம் அதைச் செய்யவில்லை என்பதானாலே அதன் உரைப்புகள் நம்மைத் திருப்திப்படுத்த வாய்ப்பே இல்லை. நீ எத்தனை தூரம் ஓடினாலும் பிரச்சனைகள் வரும் என்கிறது வேதாந்தம். நீ என்ன தலைக்கீழ் நின்றாலும் உனக்கு வயதாகும் என்கிறது. ஆகையால், அதனைக் கண்டு மிரளாதே. சில முயற்சிகள் உன்னை முன்னேற்றும்; சில முயற்சிகள் உன்னை வீழித்திவிடவும் செய்யும். அது ஏன் எனக் கேட்டு நேரத்தை விரையமாக்காதே. காரியத்தைத் தொடர்ந்து செய்வதற்கான அத்தனை உரிமையும் அதிகாரமும் உனக்குண்டு. ஆகவே, பலனைப் பற்றி கற்பனை கொள்ளாமல் உன் செயலைத் தொடர்ந்து செய் என்கிறது வேதாந்தம் என சுவாமி தனியன் நூலில் குறிப்பிடுகிறார்.

சதா காலமும் பற்பல கேள்விகள் நமக்குள் உறங்காமல் தகித்துக் கொண்டே இருக்கின்றன. அது மனித வாழ்வில் மிக இயல்பு. வேதாந்தம் அக்கேள்விகளைப் புரிந்து கொள்ளும் ஓர் உரையாடலை நமக்குள் தொடக்கி வைக்கக்கூடும். தனியன் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இத்தமிழ்ச்சூழலில் உருவாக்கிவிட்டுள்ளது.

வேதாந்தம் முழுமுதற் கடவுள் என்கிற சிந்தனையைப் பற்றி பேசி நம்மை மண்டியிட வைப்பதில்லை. வேதாந்தம் நம்மை நோக்கி உரையாடுகின்றன. உன்னை நீ உற்று நோக்கு; உள்கடந்து போய் பார்’ எனத் தேடலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம்மை உள்முகமாகத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறது என என்னளவில் தோன்றுகிறது. இதையே முழுமுற்றிலுமான புரிதல் என என்னால் ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை. ஆனால், தனியனைப் படித்து முடிக்கும்போது என்னை உரையாடலுக்கு அந்நூல் தயார்ப்படுத்தியதை முற்றிலுமாக உணர முடிந்தது.

உண்மையான சுதந்திரம் என்பது உன் சுயத்திடமிருந்து நீ பெறுவதே ஆகும் என புத்தர் உறுதியாகச் சொல்கிறார். இதையே வேதாந்தம் உன்னை வாழவிடாமல்; எந்தக் கர்மத்தையும் செய்யவிடாமல் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும் உன் கேள்விகளிடமிருந்து உன்னை விடுவித்துக் கொள்ளும் ஓர் அறிவுத் தெளிவை நோக்கி செல்வதே சுதந்திரம் என்கிறது.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.