எனது முதலும் கடைசியுமான எதிரியின் கதை

குறிப்பு: மனத்தைரியமும் வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கவும். தீபாவளி பொதுநல அறிவிப்பு.

“எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது எத்தனை ஆபத்தான செயல்?”

 

leave-a-reply-cancel-reply-pwunee-clipart

 

என் எதிரிகளை நான் தான் முடிவு செய்ய வேண்டும். எதிரிகளாக இருக்க அவர்களுக்கான தகுதிகளை நான் மட்டுமே தீர்மாணிக்கிறேன். ஆகவே, இவர்கள், இன்னார் என் எதிரிகள் என நீங்களே முடிவு செய்து கொள்ளாதீர்கள். அது அத்துமீறல்.

இன்று காலையில் எழுந்ததும் என் எதிரியைச் சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நேற்றே இன்று அவனைச் சந்தித்து மன்னிக்க வேண்டும் எனத் தோன்றியது. நம் மூதாதையர்கள், புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் இந்த மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்துவிட்டதாலே கொடூம்பாவிகளைக் கூட மன்னிக்க மட்டுமே மனம் ஒவ்வுகிறது.

என் எதிரிகள் வழக்கமாகவே சாமர்த்தியவாதிகள். அத்தனை சீக்கிரம் அவர்களை மன்னிக்கவும் மறக்கவும் இயலாது. நான் எடுக்கப் போகும் இந்த முயற்சி எனக்கே கூட ஆபத்தாக அமையலாம். என்ன செய்வது? சுற்றம் சூழ வாழத் தெரிந்தவர்களின் மிச்சம் நான். மன்னிப்பைக் கையெலெடுக்கும்போது மனம் நடுங்கியது. இத்தனை சுரணைகளும் எங்குப் போய் சுருண்டு கொண்டது? எங்கே வரட்டுக் கௌரமிக்க கோபம்? காலையிலிருந்தே காணவில்லை. இன்று என் எதிரிகளில் ஒருவனான அவனை நான் மன்னிக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் அதற்கான சந்தர்ப்பம் அமையாது.

மகிழுந்தை முடுக்குகிறேன். எனது முதலும் கடைசியுமான ஒரே எதிரியை நோக்கி விரைகிறேன். அவன் நெருங்குவதற்கு அத்தனை எளிதானவன் அல்ல. எப்பொழுதும் ஏதோ ஒரு கோபத்துடன் மட்டுமே இருப்பான். கையில் ஆயுதம் இருக்கும். யாராவது தன்னைத் தாக்கினால் தற்காத்துக் கொள்ள எப்பொழுதும் ஆயுதத்துடன் தான் இருப்பான். ஒருவேளை என் மன்னிப்பை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த ஆயுதம் என்னை நோக்கி வரக்கூடும். எதற்கும் தயாராக இருந்தது மனம்.

மகிழுந்தை அவன் வீட்டின் அருகே நிறுத்துகிறேன். கால்களில் இலேசான நடுக்கம். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இறங்குகிறேன். எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது எத்தனை ஆபத்தான செயல்? கால்கள் அடியெடுத்து வைக்கத் தயங்கவில்லை. முன் வாசல் கதவைத் தள்ளுகிறேன். அவன் என் வருகையை அறிந்துவிட்டான். எதிரியின் சாமர்த்தியம் அது.

அவனும் வீட்டு வாசல் கதவைத் திறக்கிறான். மேலும் முன்னேறும்போது மனம் அளவில்லாமல் நடுங்கியது. அவன் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கிறேன். அவன் உதட்டில் புன்னகை இல்லை. அவனும் கீழிறங்கி வருகிறான். கையில் ஆயுதம் இருந்தது. முதலில் நானே சிரிக்கிறேன். பதிலுக்கு அவனும் எதிர்பாராதவிதமாக ஓரப்புன்னகை செய்கிறான். நான் மன்னிக்கப் போகிறேன் என அவனால் யூகிக்க முடிகிறது.

கையில் இருந்த விளையாட்டுத் துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்து என் மீது தாவினான் என் எதிரியான அக்கா பையன் சிவனேசு.

“மாமா! உனக்கு என் மேல கோபம் இல்லயே? இனிமேல நீ கூப்டா வரமாட்டேனு சொல்ல மாட்டேன், சரியா?”

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.