பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஒரு பார்வை : 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் மலேசியத் தமிழ்க்கல்வியின் 200 ஆண்டுகளின் பயணம்.

banner1

20 – 23 அக்டோபர் 2016ஆம் நாட்களில் ஏய்ம்ஸ்ட் கெடா அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சு ஏற்பாட்டில் மலேசிய வடமாநிலத் தமிழாசிரியர்களுக்கான பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக நடந்தேறியது. இது என்னுடைய ஐந்தாவது மாநாட்டு அனுபவம் ஆகும். ஏற்கனவே இரண்டுமுறை கட்டுரை வாசித்துள்ளேன். இது மூன்றாவது முறையாகக் கட்டுரையைப் படைத்துள்ளேன். கெடா மாநில மொழித்துறை துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்களால் தகவல் வழங்கப்பட்டு ஏழு பேரின் கட்டுரைகள் மாநாட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த மாநாடு தமிழ்க்கல்வியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, தேசியப் பள்ளியில் தமிழ்ப் போதிக்கும் ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்காகக் கல்வி அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 1816ஆம் ஆண்டு பினாங்கு ‘ஃப்ரி’ பள்ளியில் தொடங்கப்பட்டு இன்றுவரை பற்பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மலேசியத் தமிழ்க்கல்வி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனை நினைவுக்கூர்ந்து கொண்டாடும் வகையில் மலேசியாவில் பலவகையான நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் நடந்த வண்ணமே இருந்தன. அதன் நிறைவாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படைத்ததோடு மட்டுமல்லாமல் மற்ற அமர்வுகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தைக் கொண்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். அதனைச் சில பகுதிகளாகப் பிரித்துக் கருத்துரைத்தால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாத பொதுமக்களுக்குப் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

  1. மாநாட்டு அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இந்த மாநாட்டுக்கென சிறப்பு இணையத்தளம் ஒன்றினை மாநாட்டில் ஆசிரியர் சற்குணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவே இந்த மாநாட்டின் தரத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. கீழ்க்கண்ட அந்த இணையத்தளத்தில் மாநாட்டில் படைக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் பொதுமக்கள் வாசிக்கலாம்.

http://tamilkalvi.my/

 

14797432_10211157274506344_776900704_n

  1. மாநாட்டுக் கட்டுரைகளின் தரம்

இந்த மாநாட்டின் கருப்பொருள் 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி என்பதால் மாநாட்டில் படைக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளையுமே மாநாட்டு ஏற்பாட்டுக் குழு மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்துள்ளனர். பலரின் கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டதே மாநாட்டின் தீவிரமான போக்கைக் காட்டுகிறது. முன்பு நடத்தப்பட்டு சில மாநாடுகளில் எந்தத் தலைப்பில் கட்டுரை அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. அது மாநாட்டில் பங்கேற்க அதிகப் பேருக்கு வாய்ப்பு வழங்கியதாகப் பெருமை கொள்ள முடியுமே தவிர மாநாட்டின் கருப்பொருளை உயிர்ப்பிக்க இயலாது. அவ்வகையில், கட்டுரை தேர்வுகளில் மிகவும் கறாராக இருந்து கருப்பொருளுக்கு உகந்த கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்த கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு தமிழ்ப்பிரிவு இயக்குனர் திரு.நா.இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

  1. மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு

 

conference-logo-e1476709921766

குறித்த நேரத்தில் அனைத்து அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். எந்த அமர்வுகளிலும் நேரம் வீணாகவில்லை. அமர்வுகளுக்கு நெறியாளர்களாக அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் நேர்த்தியாகவும் வழங்கப்பட்ட நேரத்திற்குள்ளாகவும் அமர்வுகளை வழிநடத்தினர். அதே போல மாநாட்டுத் திறப்புவிழாவும் நிறைவு விழாவும் காலம் தாமதமின்றி மிக ஒழுங்குடன் நடத்தப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியாகும். மாநாட்டிற்கு வருகையளித்த கல்வி அமைச்சர், துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பான உரையாற்றியதும் மாநாட்டின் நேர்த்தியின் சிறப்பைக் காட்டுகிறது. இது கலந்து கொண்ட பேராளர்களுக்குப் பெரும் திருப்தியை அளித்தது. அவ்வகையில் மாநாட்டின் தலைவர் திரு.வே.இளஞ்செழியன் அவர்களுக்கும் அவர்தம் செயல்குழு உறுப்பினர்களுக்கும் மாநாட்டுப் பேராளர்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  1. மாநாட்டு மலர், நற்சான்றிதழ் & நிகழ்ச்சி மலர்

இதுவரை மற்ற மாநாடுகளில் பார்க்காத சிறப்பு மாநாட்டு மலரும், மாநாட்டுக் கட்டுரை படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழும் தரமானதாக அமைந்திருந்தன. மிகவும் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் அச்சேற்றப்பட்டிருந்தன. மாநாட்டு நிகழ்ச்சி மலர் ஏய்ம்ஸ்ட் வரைப்படம், தமிழ்க்கல்வியின் வரலாற்றுக் கட்டுரை என நிறைவான ஒரு தயாரிப்பாகும். அச்சு வேலைக்குப் பொறுப்பாக இருந்த மலேசியப் பாடநூல் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.தமிழ்செல்வன் பெருமாள் அவர்களுக்குப் பாராட்டுகள். வடிவமைப்பும் கவரும் வண்ணம் இருந்தது கூடுதல் பலம்.

  1. கட்டுரைப் படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரம்

 

????????????????????????????????????

பற்பல சிரமங்களுக்குக்கிடையே உழைப்பை முதலீடாக வைத்துக் கட்டுரை தயாரித்த படைப்பாளர்களுக்கு இந்த மாநாட்டில் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. கேள்வி பதில் அங்கமும் சிறப்பான விளைப்பயனை அளித்தது. அனைத்துப் படைப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவாகக் கட்டுரையைப் படைத்தது சிறப்பானதாகும்.

 

  1. மாநாட்டில் கட்டுரைப் படைத்தவர்கள் பெரும்பகுதியினர் இளைஞர்களே

பலவகையில் நிறைவான ஒரு மாநாடாக அமைந்திருந்த பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு மேலும் ஒரு புதிய திருப்புமுனையாக அதிகமான இளைஞர்கள் கட்டுரையாளர்களாகப் பங்கெடுக்கும் ஒரு வழியை வகுத்திருக்கிறது. தமிழ்க்கல்வியை நிலைநிறுத்த இளைஞர்களின் பங்களிப்பை இந்த மாநாடு ஒரு முகாந்திரமாக அமைத்துவிட்டிருப்பதாக  பலரும்  குறிப்பிட்டுப் பேசினார்கள்.

தமிழ்க்கல்வி இனி வரும் 21ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சமாளித்து மேலும் பல்லாண்டுகள் மலேசியாவில் தடம் பதிக்கும் வகையில் ஒரு பெருந்திறப்பையும் ஆர்வத்தையும் சிந்தனையையும் இந்தப் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு ஏற்படுத்தி வெற்றிக் கண்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டிற்குப் பொறுப்பு வகித்தவர்களான தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.சந்திரகுரு வெற்றியப்பன், முனைவர் மோகனதாஸ் இராமசாமி, கலைத்திட்ட மேம்பாட்டுத் தமிழ்ப்பிரிவின் தலைவர் திரு.நா.இராமநாதன், பாடநூல் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.பெ.தமிழ்செல்வன், திருமதி சந்திரகலா ஐயப்பன், முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி மேலும் பலர் தலைமைத்துவமிக்க கல்வியாளர்கள் என்பதானாலே இந்த மாநாட்டைச் சிறப்பாக அமைத்து வழிநடத்தியுள்ளார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். இனி வரும் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்க்கல்வியைப் புதிய பொழிவுடன் கொண்டு போய் சேர்ப்பதில் அனைவருக்கும் பங்குண்டு என்பதையே இந்த மாநாடு உணர்த்தியது.

 

தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.