Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

 

sohee-gong-yoo-jung-yoo-mi-choi-woo-sik_1466636416_af_org

“Selfish people are weak and are haunted by the fear of loss of control”

Selfishness is putting your goals, priorities and needs first before everyone else even those who are really in need.

By M.Farouk RadwanMSc.

மேற்சொல்லப்பட்டிருப்பதைப் போல சுயநலம் என்பது ஒரு வகையான மனநோய் தொடர்புடையது எனத் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் இன்றைய உளவியல் பகுப்பாய்களும் நிறுவுகின்றன. ஆனால், சுயநலம் என்பது ஒரு தனிமனிதன் தொடர்பான சமூகத்தளத்தில் அவனைச் சம்மற்றக் குணமுடையவனாகக் கற்பிக்க முயலும் ஒரு பொதுப்பிரச்சனையாகவே காலத்திற்கும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு பொது சமூகத்திற்கு அநாவசியமற்ற அனைத்தையும் ஆராயாமல் அதை ஒரு தனிமனிதனிடமே கொண்டு போய் சுமத்துகிறது. ஆனால், அச்சமூகம் கோரும் அனைத்து பொது நடத்தைகளுடன் ஒரு தனிமனிதன் எல்லாம் வேளைகளிலும் 100% பொருந்திப் போக முடியாதவனாக மாறுகின்றான். அவன் அப்படிச் சமூகத்தின் பொதுவிதிகளுக்கு எதிராகச் செயல்படும்போது அவன் மனத்தை ஆராய்ந்து பார்க்காமல் அவனை விரோதியாக மட்டுமே சமூகம் உருவகிக்க முயல்கிறது. (திட்டமிட்டு செய்யப்படும் எதுவுமே இந்த விவாத்திற்குள் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

இக்கொரிய படம் வழக்கமான ‘சோம்பி’ கதையாக இருப்பினும் ‘சுயநலம்’ என்கிற ஒரு விசயத்தை விவாதிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக, இக்கதையில் இரண்டு விதமான சுயநலவாதிகளைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது. கதை நெடுக இவர்கள் பயணிக்கிறார்கள். ஒன்று கதையில் வரும் சிறுமியின் அப்பா மற்றொருவர் அந்த இரயிலில் பயணிக்கும் இன்னொரு வயதான மனிதர். இருவருக்கும் உள்ளே மனக்கூறுகள் களைக்கப்படுகின்றன. பயத்தால் ஆளப்படுகிறார்கள். பதற்ற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். நீரில் மூழ்கி உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை உங்களால் கணிக்க முடியுமா? அது இருப்பை இழந்து தன் உயிரை மட்டுமே காப்பாற்றிக் கொள்ளப் போரிட்டுக் கொண்டிருக்கும். அத்தகைய ஒருவரைக் காப்பாற்ற நீங்கள் நெருங்கினால் என்ன ஆகும் எனச் சிந்தித்துப் பார்க்க இயல்கிறதா? உங்களை நீருக்குள் அமிழ்த்தி அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்கள். இதற்குப் பெயர் சுயநலம் என அத்தனை எளிதாகச் சொல்ல முடியுமா? ஆகவே, சுயநலம் என அறியப்படுகின்றவற்றில் இரண்டு வகைகள் உண்டு என எடுத்துக் கொள்ளலாம்.

உச்சமான பதற்ற நிலையில் உருவாகும் சுயநலம்/ மன உணர்வுகள் கொந்தளிப்புக்குள்ளாகும்போது ஏற்படும் நிலை.

உயிர் மீதான பயம் வந்துவிட்ட பிறகு இத்தகைய குணம் ஒரு மனிதனை அவன் மனத்தை மீறித் தொற்றிக் கொள்கிறது. அடிப்படையான மனக்கூறுகளை அவன் இழந்துவிடுகிறான். அடுத்து, சிந்திக்கும் வலு மெல்ல பலவீனம் அடைகிறது. அடுத்து, அவனை மூர்க்கமாக மாற்றும். அத்தகைய மூர்க்கத்திற்கு ஆளாகிவிட்ட ஒருவனிடம் பொதுநலமோ அன்போ இருக்கப் போவதில்லை. அவன் உணர்வது அவன் உயிர் மட்டுமே.

இரண்டாவது வகையான சுயநலம் பொது சமூகத்திற்கு எதிரானது. தன் மீது அவநம்பிக்கையை உருவாக்கி அவர்களின் செயல்களை ஆட்கொள்ளும் விதத்தைச் சேர்ந்தது. ஒரு பதற்றநிலை உருவாகியதும் முதலில் அதுபோன்ற மனிதர்கள் தன் உடமைகள், தன் இலட்சியங்கள், தன் குடும்பம் குறித்து அதீத கவலைக்குள்ளாகுவார்கள். அடுத்து, தன்னால் தன்னைக் காப்பாற்ற முடியுமா என்கிற சந்தேகத்திற்கு ஆளாகுவார்கள். அடுத்து, தன்னலத்தை முன்னிறுத்தி இயங்கத் துவங்கிவிடுவார்கள். இது அத்தனைக்கு பிறகும் அவர்கள் மனம் நிதானத்தை இழந்திருக்காது. ‘சூ ஒன்’ சிறுமியின் தந்தை இத்தகைய ரகத்தைச் சேர்ந்தவர். அதிக பதற்றத்திற்கு ஆளாகாவிட்டாலும் அருகில் இருக்கும் ஒரு வயதான பாட்டியைக் கூட காப்பாற்ற முனையமாட்டார்; கற்பனி பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தோணாது. ஆனால், படம் முடியும் தருவாயில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கதாப்பாத்திரம் தன் சுயநலத்தைக் கொன்றுவிட்டுத் தன் மகளின் இருப்பால் பொதுநலமான ஒரு கதாப்பாத்திரமாக மாறும். இறுதியில் அதுவே தன்னை அழித்தும் கொள்ளும்.

இதே படத்தில் வரக்கூடிய மிகவும் கொடூரமான சுயநலவாதியாகக் காட்டப்படும் இன்னொரு கதாபாத்திரம் படம் நெடுக பலரை சோம்பிக்குப் பலியாக்குவதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘சோம்பியைவிட’ மிகக் கொடூரமானவராக அந்தக் கதாப்பாத்திரத்தைதான் இயக்குனர் சித்தரித்திருப்பார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லோரையும் பலியிடத் தயாராகும் கொடிய மனிதராகக் கதையில் வருவார்.

‘சோம்பியை’ விட சுயநலம் மிகக் கொடிய நோய் என்பதைப் போல அக்கதைப்பாத்திரம் அமைந்திருக்கும். இது ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை என்றே சொல்லலாம். ஆனால், படத்தின் இறுதி காட்சியில் இத்தனை கொடூரமான மனநிலை கொண்டவராகக் காட்டப்படும் அவரைச் ‘சோம்பி’ கடித்துவிடுகிறது. கதாநாயகன் முன் மண்டியிட்டுத் ‘தன்னுடைய அம்மா வீட்டில் காத்திருப்பார், நான் வீட்டுக்குப் போக வேண்டும், என்னைக் காப்பாற்றுங்கள்’ என ஒரு குழந்தையைப் போல அழுவார். அத்தனை நேரம் மிகக் கொடியவனாகக் காட்டப்பட்ட அவர் ஒரு கணம் மனத்தைக் களைத்துப் போடுகிறார். சட்டென மனம் நெகிழ்கிறது.

 

train_to_busan_h_2016

நீங்கள் ஒரு சில சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் விளையாட்டுப் பொருளை எடுத்துவிட்டால் கையில் கிடைக்கும் பொருளை நம் மீது விட்டெறிவார்கள். அவர்கள் வன்முறையாளர்கள் என அத்தனை எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என கீழே படுத்துப் புரண்டு அடம் பிடித்துக் கத்தும் குழந்தை சமூகத்திற்கு எதிரான மனம் கொண்டது எனச் சொல்லிவிட முடியுமா? சுயநலம் என்கிற ஒரு வகையான மனக்கூறு ஒருவனை அவனோடு தொடர்புடைய பதற்ற நிலையில் சிறுவனாக்கி விடுகிறது. தான் கரைக்கு ஏறியதும் இன்னொருவரை ஆற்றில் தள்ளிவிடும் சிறுவர்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், அது சிறுபிராயத்தில் இயல்பான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதுவே, வளர்ச்சியடைந்து பக்குவமடைந்த மனிதன் அதையே செய்யும்போது அவனை மனநோயாளியாகப் பார்க்க உளவியல் உலகம் கற்பித்து வருகிறது.

இப்படம் சுயநலம் எனும் ஒரு விசயத்தைக் கதையின் ஓட்டத்தில் திணித்துவிடாமல் தனியாக எடுத்து விவாதிக்கும் அளவிற்குக் கவனப்படுத்தியிருக்கிறது என்றே நினைக்கிறேன். மேலும், கதையில் வரும் கற்பனிப் பெண்ணின் கணவர் பொதுநலம் வாய்ந்தவனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். சுயநலவாதிகளைப் பிரித்தறிவதற்காக அக்கதைப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய மனிதர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். எவ்விதப் பதற்றநிலையிலும் தனக்கான மனக்கூறுகளை இழக்காமல் தன்னம்பிக்கையோடு தன்னலத்தையும் பிறர் நலத்தையும் பொருட்படுத்தும் மனிதர்கள் எங்குமே வியாபித்துள்ளார்கள். பெரும்பாலான உலகப் பேரிடர்களில்கூட இதுபோன்றவர்களைப் பார்க்க முடியும். சில வருடங்களுக்கு முன் சில்லியில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 அடிக்கும் கீழ் 33 தொழிலாளிகள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை எல்லோரும் உயிர்ப்பிழைக்கக் காரணம் அந்நிலையிலும் மிகச் சாமர்த்தியமாகச் சூழ்நிலையைக் கையாண்ட ஒருவர்தான். 2004ஆம் ஆண்டில் சுனாமி வந்தபோது ஏதோ ஒரு பகுதியில் குழந்தை ஒன்றை நாய் காப்பாற்றி மீண்டும் கரைக்குக் கொண்டு வந்த சம்பவத்தை எல்லோரும் அறிவோம். இதை என்ன பொதுநலம் எனச் சொல்லிவிட முடியுமா? அல்லது அதற்குப் பெயர் என்ன? அத்தகைய அவசர நிலையில் நாயின் எந்த உளவியல் அப்படியொரு காரியத்தைச் செய்யத் தூண்டியிருக்கும்? மனித மனம் விந்தையானது; ஆழமானது என்றால், இதை என்னவென்று சொல்வது?

இது சுயநலத்தைப் பற்றி ஆய்வு கிடையாது. ஆனால், சுயநலம் என்கிற ஒன்றைச் சமூகக் குற்றமாகப் பாவிக்காமல், அதனை மனத்தின் ஒரு செயல்பாடாக, மனத்தோடு தொடர்புடைய ஒரு சிக்கலாகப் பாவிக்கும் மனநிலைக்கு நாம் வரவேண்டும் என்பதற்காக ஓர் உரையாடல் மட்டுமே. சுயநலம் பிடித்த அனைத்து மனங்களிலும் வெறும் குரூரம் மட்டுமே இருந்துவிடாது. அதற்குள் அடம்பிடிக்கும் ஒரு சிறுவனும் குழந்தையும்கூட இருக்கலாம். தனக்குப் பிடித்தமான பொருளை அம்மா யாருக்காவது எடுத்துக் கொடுக்கும்போது அவர் மீது கோபங்கொண்டு பாயும் குழந்தையும்; தன் குட்டியை அதனிடமிருந்து எடுக்கும்போது சட்டென சீரும் பூனையும் அடிப்படையில் யார்?

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.