சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது

02stone-blog480

அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு வந்து நடு வீதியில் வைத்துவிட்டார்கள். புதிய நாகரிகம், புதிய இடம், புதிய மக்கள். சமூகத்தில் இருந்த அத்தனை பேரும் காலையில் எழுந்ததும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. யார் தம்மை இப்படித் தூக்கி வந்து போட்டிருப்பார்கள் என்றும் அவர்களுக்கு விளங்கவில்லை.

சமூகம் வெளியே வந்து பார்த்தது. மொழியும் புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இப்படியொரு காலையை அச்சமூகம் அனுபவித்ததே இல்லை. ஏறக்குறைய அங்கிருந்த யாவரும் சமூகத்திற்கு அறிமுகமே இல்லை. அந்த இடம் விநோதமாகத் தென்பட்டது. எல்லோரும் தனித்தனியாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாதது சமூகத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.

சமூகம் மெல்ல நகர்ந்து நகர்ந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களைக் கண்ணோட்டமிட்டது. எல்லோரும் புன்னகையுடன் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சமூகம் கண்கள் விரிய அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. கடைகளில் பொருள்கள் விற்று கொண்டிருந்தவர்களை நோக்கி சமூகம் அடியெடுத்து வைத்தது.

அமைதியாக எல்லோரும் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தனித்தனியாகக் கடைகளுக்கு வெளியில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சமூகத்திற்கு வயிறு பிரட்டிக் கொண்டு வந்தது. சமூகம் அதிக சோர்வாக இருந்ததால் அப்பெரிய கட்டிடத்தின் ஓரம் போய் மீண்டும் உறங்கத் துவங்கியது. அப்படித் தூங்கும்போது சமூகமே ஒட்டுமொத்தமாக ஒரு கனவு கண்டது. அக்கனவு ஒரு காலை பொழுதில் ஆரம்பிக்கிறது.

சாலை நெரிசல் பொறுக்காமல் சமூகம் மனத்தில் வெடித்துப் பொங்குகிறது. அந்நேரம் அழைப்பு வருகையில் இரண்டு பொய்கள், மூன்று பேரிடம் கத்தல் கதறல் எல்லாம் முடிந்து நெரிசலில் சாலையைக் கடக்கும் பள்ளிக்கூட சிறுமியைப் பார்த்து சாபமிடுதல். பொன்மொழிகள் பிதுங்கி பிய்ச்சியடிக்கும் அந்த இனிமையான காலையைத் தூக்கி முதுகில் சுமந்து கொண்டு அலுவலகம் சேர்ந்தால் பிய்த்தலும் பிடுங்கலுமாகக் கூட்டம். காதிற்குள் யாரோ சங்கூதி சங்கூதி செல்வதைப் போன்ற இனிமையான இரைச்சல்களுடன் வேலையை முடுக்கினால் பக்கத்து வேலையாள் “ ஏய் நான் செல்பி போட்டுருக்கேன் பேஸ்புக்குல, மறந்திறாம லைக் போடு தெரியுமா?” என்கிற குரல்.

வேலைப்பளு மண்டைக்குள் சந்தோசமாக மணியாட்ட இந்தப் பக்கம் திரும்பினால், “ஏய் உன் பக்கத்துல இருக்காலே அவக்கிட்ட பார்த்து இருந்துக்கோ. நெறைய பேர வச்சிருக்கா. அவ பேஸ்புக்குல போய் பாரு தெரியும்…” இன்னொரு குரல். மண்டைக்குள் ஆட்டிக் கொண்டிருந்த மணியை யாரோ எடுத்து இப்பொழுது அதிலேயே இனிமையான தாளம் போடுவது போல இருந்தது. மேலேயிருக்கும் ஒரு கோப்பை எடுக்கலாம் என நிமிர்ந்தால், “ஏய்! உன்கூட உக்காந்துருக்குங்களே ரெண்டுமே பயங்கர ஜால்ரா. முதலாளிக்கிட்ட உன்னைப் பத்தியே போட்டுக் கொடுக்குதுங்க, பாத்து இருந்துக்கோ,” என்கிறது எதிர்ப்புறக் குரல். ஆனந்த வெள்ளம் உள்ளுக்குள் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தது.

சட்டென்று அலுவலகத்தில் ஒரே பரப்பரப்பு. யாரோ கழுத்தறுப்பட்டுக் கிடக்கும் புகைப்படத்தை எல்லோரும் மாற்றி மாற்றி பார்த்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். காலை மணி 8.45 தான் இருக்கும். இன்னும் சூரியன்கூட சூடாகவில்லை. வெளியேறலாம் என நினைக்கும்போது, “என்னடா இது? கழுத்து அறுந்துருக்குனு சொல்றீங்க. ஆனால், இரத்தமே இல்ல. இரத்தத்தைப் பாத்தாதான் நம்புவேன்,” என ஒலிக்கிறது ஒரு தடித்த குரல். காலை பொழுது இனிதே மங்களகரமாகியது

மண்டைக்குள் உருளும் காயு பாலாக் பெருங் கட்டைகள் போல மகிழ்ச்சி அடுக்கியடுக்கி விளையாடிக் கொண்டிருந்தபோதே வெளியேறலாம் என்றால், “ஏய்! இங்கப் பாரு. இவங்கள உனக்குத் தெரியுமா? ரெண்டு பேரும் கிஸ் அடிக்கிற அழகைப் பாரு. எவனோ தூரத்துலேந்து படம் எடுத்துட்டான்,” என்கிறது ஓர் ஆன்மீகக் குரல். அப்பொழுதுதான் பரவச வெள்ளம் மனத்தை ஆற்றுப்படுத்தி அன்றைய காலையைக் குதுகலமாக்கியது. பறந்துபோய் எல்லோர் அறைக்குள்ளும் ஒளிந்து காதுகளைக் கழட்டி அங்கேயே நட்டு வைக்கலாம் என்கிற பரவசம் மனத்தை அழுத்தியது.

கடத்தப்பட்ட சமூகம் சட்டென்று விழித்தது. எதிரில் இருந்த யாவரின் கையிலும் கைப்பேசி இல்லை. அவரவர் யாருடனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் ஒரு மிக மோசமான புன்னகையை மட்டும் சுமந்து கொண்டிருந்தனர். கோபமடைந்த சமூகம் விழித்தெழுந்தது. சட்டென எதிரில் வந்த ஒருவனை அடித்து அவன் ஆடைகளைக் களைந்தது. கையில் வைத்திருந்த கைப்பேசியில் அந்தச் சண்டையைச் சமூகம் பதிவு செய்து அனைவருக்கும் அனுப்பியது.

சமூகம் காத்திருந்த பரப்பரப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. மேலும், பரப்பரப்பு போதாமல் சமூகம் அடுத்தடுத்தவர்களை நோக்கி பாய்ந்தது.

‘சமூகம்டா! வாழுங்கடா! The social zombie is return”

 

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.