இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி

chair 2

 

17 ஜனவரி 2016

“டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…ரெடியா இரு…”

இந்தக் கட்டளையை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை. இப்பொழுது நான் திரைப்படக் கலைஞராக இருக்கிறேன் என்றால் என்னைப் புரட்டிப் போட்டு ஒரு கனம் வாழ்க்கையைத் திருப்பிவிட்டது அந்தக் கட்டளைத்தான். எனது இரண்டு படங்கள் இப்பொழுது மலேசியாவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

என் நண்பன் முரளி. 1998ஆம் ஆண்டில் பத்துடுவா இடைநிலைப்பள்ளிக்கு வெளியில் நடந்த ‘கேங் சண்டையில்’ அன்று இறந்துவிடுவான் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. கடைசியாக அவன் என்னிடம் சொல்லிவிட்டுப் போன வார்த்தை அதுதான்.
…………………………………………………………………………..

ஆகஸ்டு 24 1998

எனக்கு முன்னே இருந்த, நான் ஓராண்டு அமர்ந்து, கிறுக்கி, சூடாக்கிய நாற்காலியைக் கீழே போட்டு ஒரு மிதியில் அதன் காலை உடைத்தேன்.

“Segar! Beridiri diatas kerusi. Inilah hukuman kamu…”

சைட் வாத்தியார் பலமுறை ஏறி நிற்க வைத்த நாற்காலி. வகுப்பில் இருந்த மணியம், முரளி, சுகுமாறன் என அனைவரின் கேலிப்பெயர்களையும் கிறுக்கி வைத்த நாற்காலி.

“டேய்! அறிவாளி. இரண்டு கால்ல ஆடாதேனு எத்தன தடவெ சொல்றது? நாற்காலிக்கு என்ன ரெண்டு காலா?

பண்ணீர் வாத்தியாரிடம் என்னால் இந்த நாற்காலி வாங்காத அடியில்லை. என்னை அடிப்பதாக நினைத்துப் பலமுறை கோபத்தால் அவர் கையிலிருக்கும் பிரம்பால் நாற்காலியை வெளுத்துள்ளார். அப்பொழுது என் நாற்காலிக்கு ஒரு பெயரும் வைத்திருந்தேன். இடிதாங்கி.

அப்படிப்பட்ட நாற்காலி ஒரு காலை எனக்குக் கொடுத்துவிட்டு கீழே கவிழ்ந்து கிடந்தது. கேள்விகள் எனக்குள் அலையலையாய் பெருகி வந்தன.
……………………………………………………………………………………………………………

ஜூன் 15 1998

அன்று சரியாக காலை 10.20க்கு என் வகுப்பு நண்பன் அமலதாஸ் கழிவறைக்குச் சென்றான். ஒரு நாளில் மூன்று முறையாவது கழிவறைக்கு வெளியாவது இவன் தான். பாட நேரத்தில் வெளியில் திரிந்து கொண்டிருக்கும் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேர்ந்தால் அவன் பெயர்தான் அமலதாஸ். கொஞ்சம் குட்டையான ஆள். மெலிந்து காணப்படுவான். அதனாலேயே அவனை வெகு சீக்கிரம் கேலி வதை செய்துவிடுவார்கள்.

“டேய் சேகரு! கட்டையா பிறக்கறது தப்பா? நான் என்னடா செஞ்சேன்?” எனப் பரிதாபமாக அவன் என்னிடம் கேட்கும்போதெல்லாம் “வீட்டுல உள்ள கம்பியைப் பிடிச்சி தொங்குடா,” என நானும் கேலியே செய்திருக்கிறேன்.

அவன் அன்று கழிவறைக்குள் நுழையும்போது நான்காம் படிவம் படிக்கும் ஜெயகணேசும் மாரிமுத்துவும் உள்ளே இருந்தார்கள். அமலதாஸ் ஐந்தாம் படிவம் என்றாலும் அவர்களைவிட உயரம் கம்மியே. அதனால் அவனுக்கு இயல்பாகவே தன்னைவிட உயரமானவர்களை எதிர்க்கொண்டால் உடனே ஒரு பயம் வந்துவிடும்.

கழிவறைக்குள் நுழைந்ததும் வலது பக்கத்தில் தண்ணீர் தொட்டி இருக்கும். அதிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்ற ஒரு நெகிழிக் குவளையும் இருக்கும்.

“வந்துட்டான் பாரு தொடை நடுங்கி…. இவன்லாம் பெரிய பையன்…”

“டேய் நீ அமலாவா அமலாதாஸா? ஹா ஹா”

அன்று அவர்கள் அவனுடைய தலையில் அடிப்பார்கள் என அவன் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான். மாரிமுத்து அவனுடைய பின்னந்தலையில் அடிக்கும்போது அங்கு நீர்த்தொட்டியின் முனையை யாரும் கவனிக்கவில்லை.
…………………………………………………………………………………………..

ஜூன் 16 1998

பள்ளியின் முதல்வர் மாரிமுத்துவையும் ஜெயகணேசுவையும் விசாரித்துவிட்டு வெளியில் இழுத்து வந்தார். நான், முரளி இன்னும் சில நண்பர்கள் நிழற்குடையின் மேல் கட்டையில் வரிசையாக அமர்ந்திருந்தோம். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமலாதாஸ் மண்டையில் காயம் பட்டதைப் பற்றி கூட எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், மாரிமுத்து அன்று தலை கவிழ்ந்து அடுத்து என்ன நடக்கப் போகிறது என திரு திருவென விழித்தப்படி நின்றிருப்பதைப் பார்க்கும்போது மனமெல்லாம் பரவசமாகியது. நம் எதிரியைத் தண்டித்துப் பார்ப்பதில் கிடைக்கும் ஆன்ந்தத்தை அன்று முரளி எனக்குச் சொல்லிக் கொடுத்தான்.

மாரிமுத்துவும் ஜெயகணேசுவும் பள்ளியிலிருந்து ஒரு வாரத்திற்கு நீக்கப்பட்டார்கள். மேலும் கட்டொழுங்கு ஆசிரியரிடமிருந்து சபையில் இருவருக்கும் ஆறு ரோத்தான்கள் வழங்கப்பட்டன. மனத்தில் யாரோ மயிலிறகால் வருடிவிடுவதைப் போன்று நானும் முரளியும் நின்றிருந்தோம்.

“யாருடா இந்த மாரிமுத்து? ஏன் உனக்கு அவன் மேல இத்தனை கோபம்?” என நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல அவன் வார்த்தைகளைத் தன் மனத்தின் ஆழத்திலிருந்து சேகரித்துக் கொண்டிருந்தான்.

“இந்த மாரிமுத்துவும் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னால சின்ன வயசு கூட்டாளி. ஒரே கம்பம். ஒரே ஸ்கூல்லத்தான் படிச்சோம். அவுங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு நாள் பயங்கர சண்டெ. எங்க அப்பாவெ ஆளு வச்சி அடிச்சிட்டாரு. மட்டமா பேசிட்டாரு. நாங்க அங்கேந்து ராத்திரியோட ராத்திரியா வெளிய வந்துட்டோம்”

அவனுக்குள் கோபம் தலை தூக்கியது.

“எப்படிடா உங்க ரெண்டு அப்பாக்கும் சண்டெ?”

“எல்லாம் ஜாதி பெரச்சன. ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி அடிக்கிற கைங்க. பேச்சு வாக்குல எங்க அப்பாவெ இவனோட அப்பா தப்பா பேசிட்டாரு. அதான்”

“சரி விடுடா. இனிமே இவனால உனக்கு பெரச்சன வராது”

நான் சொன்னதை அவன் கேட்டதாகத் தெரியவில்லை. மாரிமுத்து அடி வாங்குவதையே இலேசான புன்னகையுடன் இரசிக்க இரசிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னால் அப்பொழுதும் முரளியைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜூன் 20 1998

முரளி சைக்கிளைப் பள்ளிக்கு வெளியில் வைத்து யாரோ தீயிட்டுக் கொழுத்தியதைக் கேள்விப்பட்டு இருவரும் வெளியே ஓடினோம். கையில் தலை கவசத்தை வைத்துக் கொண்டு பெரிய ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் உடலெல்லாம் பச்சை குத்தப்பட்டிருந்தது.

“டேய்! நீதான் முரளியா? பெரிய மண்டயா நீ?”

அவர்கள் எங்களை நோக்கி வருவதைச் சுதாரித்துக் கொண்டதும் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம். அன்று சாயங்காலம்வரை ஆண்களின் கழிப்பறையிலேயே ஒளிந்திருந்தோம். எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

“என்னடா முரளி இப்படி ஆச்சு? அவனுங்க கேங்ல உள்ளவனுங்கடா…செத்தோம்”

முரளி கழிவறையில் இருந்த குழாயை உடைத்து எடுத்தான். அதனைக் கெட்டியாகக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். பள்ளிக்கு வெளியே வந்து பார்த்தோம். யாருமற்ற சாலை வெறிச்சோடிக் கிடந்தது.


ஜூன் 21 1998

முரளி இப்பொழுது தங்கியிருந்த வீட்டுக்கு யாரோ தேடி வந்து அவனுடைய அப்பாவின் மோட்டரையும் அடித்து உடைத்துவிட்டு வீட்டில் கல்லெறிந்துள்ளார்கள். காவல்துறை அதிகாரிகள் வருவதற்குள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். முரளியின் அப்பா காவல்துறையில் மாரிமுத்துவின் மீதும் அவன் அப்பாவின் மீதும் புகார் கொடுத்தார். அம்மா இல்லாத பிள்ளை முரளி. எல்லாவற்றுக்கும் அப்பாவையே நம்பி இருந்தான்.

அதன் பின்னர், இரண்டு நாட்களுக்கு முரளி பள்ளிக்கூடம் வரவே இல்லை. அவனுடைய பெரியப்பாவின் வீட்டில் இருவரும் தங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் அவனைப் பார்க்காமல் ஒரு மாதிரியாக இருந்த்து.

ஜூன் 24 1998

மாரிமுத்து நீக்கப்பட்ட காலம் முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்தான். அன்று முரளியும் விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்துவிட்டான். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இருவரும் கோபத்தின் உச்சத்தில் இருப்பார்கள் எனத் தெரியும். முரளி கேட்பதாக இல்லை. அவனுக்குத் தெரிந்த வேறு பள்ளி நண்பர்களை மட்டம் போட்டுவிட்டு சரியாக 1.10க்குப் பள்ளியின் எதிர்புறம் கூடச் சொல்லிவிட்டதாகச் சொன்னான். அவன் கண்களில் வெறி இருந்தது.

மணி 1.00ஐ நெருங்கியது. பெரிய மண்டபத்தின் பின்புறத்தில் இருவரும் வந்து நின்று கொண்டோம். அங்கிருந்து வலதுபுறத்தில் எங்களுடைய வகுப்பறை.

“டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…”எனச் சொல்லிவிட்டு முரளி மட்டும் முதலில் வெளியே போனான்.

வகுப்பிலிருந்து மாணவர்கள் வெளியானதும் நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். வகுப்பே அமைதிக்குள் மூழ்கியிருந்தது. மணி 1.15ஐத் தொட்டது. இந்நேரம் முரளி அவனுடைய வெளிநண்பர்கள் சூழ மாரிமுத்துவைத் தாக்கத் தயாராகியிருப்பான். எனக்கு நெஞ்சம் பதற்றமாக இருந்தது. என்னை இத்தனை நாள் தாங்கிய நாற்காலியை உடைத்து அதன் ஒரு காலைக் கையில் பிடித்திருந்தேன். அப்பொழுது ஊனமாகி நின்றிருந்தது நாற்காலி மட்டுமல்ல.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

One Response so far.

  1. Mithraashini Visvanthan says:

    Good story sir. The way you start good.