சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?

5290885-a-smiling-baby-with-a-pacifier-is-sitting-in-the-toy-truck-on-the-grass-Stock-Photo

கடைசியாக அலமாரியை எடுத்து வைக்கும்போது எனக்கு மட்டும் கொஞ்சம் இடம் மிச்சமாக இருந்தது. ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டால் எப்படியும் இரண்டு மணி நேரம் போகும் கனவுந்து பயணத்தில் கால்களில் வலி இருக்காது. ஒரே தாவில் கனவுந்திற்குள் ஏறினேன். அப்பாவுடைய கனவுந்தில் எல்லாமே எனக்கு பழக்கம். இடையில் ஒரு பலகை அதன் மீது கால் வைத்தால் இலேசாக முனகும். அதைத் தவிர்த்து லாரியில் சுதந்திரமாக நடமாடவும் எகிறிக் குதிக்கவும் எனக்கு நன்றாகத் தெரியும்.

“கடன்காரனுங்க…” என ஏதோ முனகிக் கொண்டே அப்பா லாரியை முடுக்கினார். அம்மாவும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள கனவுந்து தாசேக் கம்போங்கை நோக்கிப் புறப்பட்டது. அப்பாவுடைய லாரி என்றால் எனக்குப் பிடிக்கும். அதுவும் என்னைப் பின்னே காற்றோட்டமாக அமர வைத்துப் போகும் பயணங்களில் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் கடனுக்கு வாங்கி வாழ்நாள் முழுக்கப் போராடி லாரியின் கடனைக் கட்டி முடித்தும் அவருக்குப் பிரச்சனை நின்றபாடில்லை.

“இப்படியே ஓடிக்கிட்டெ இருக்க வேண்டியதுதானா?”

அம்மா எப்பொழுதும் இப்படி வீடு மாறி போகும்போது உதிர்க்கும் அதே வசனம். அப்பா அதற்கெல்லாம் சளைத்தவர் அல்ல. சோக முகத்துடன் தப்பித்துவிடுவார். அவருக்குத் தெரிந்த்தெல்லாம் உடனே அடுத்து 10 மைக்கு அப்பால் ஒரு புதிய வாடகை வீட்டைக் கண்டுபிடித்துவிடுவது. அப்பாவிற்கு இத்தனை வீடுகள் தெரிகிறது என ஆச்சர்யமாக இருக்கும்.

இத்துடன் இந்த ஆண்டில் இது மூன்றாவது வீடு. ஆறு மாதத்திற்குள் இரண்டு பள்ளிகள் மாறிவிட்டேன். அடுத்து போகும் பள்ளி எது, எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. சுதாகர் நாளை வழக்கம்போல காலையில் வீட்டின் முன் வந்து நிற்பான். என்னை விடாமல் அழைப்பான். எப்பொழுதுமே அவன் வரும் முன்பே காலணியை அணிந்துவிட்டு வீட்டு வராந்தாவில் அமர்ந்திருக்கும் என்னை நாளை அவன் பார்க்காமல் ஏமாந்து போவான். ஒருவேளை நான் நாளை விடுமுறை என நினைத்து அதற்கு மறுநாளும் வந்து நிற்பான். அப்பொழுதும் ஏமாந்து போவான். நாங்கள் ஒன்றாகக் கடந்து செல்லும் பெரியசாமி இரம்புத்தான் மரம், ஆச்சி நாசி லெமாக் கடையிலிருந்து வரும் வாசம், பூங்காவில் காலை பயிற்சிக்கு வந்து நிற்கும் தாத்தா என அனைத்துமே நாளை நான் பார்க்கவே முடியாது. சுதாகர் தனியாக இதனையெல்லாம் தாண்டிப் போவான்.

சுதாகரிடம் ஒரு வார்த்தை சொல்லி வரவும் அவகாசம் இல்லை. இன்று இரவு 8 மணிக்கு அப்பா லாரியைக் கொண்டு வந்து எல்லாம் ஏற்பாடும் செய்துவிட்டேன் உடனே புறப்படுங்கள் எனச் சொன்னதும் என் பூனைக்குட்டியை மட்டும் பக்கத்து வீட்டுக்குச் செல்லும் சிறிய சந்தின் வழி விட்டுவிட்டு வந்தேன். வேறு எதையும் செய்ய நேரமில்லை.

நாளை காலை ஆனந்தி ஆசிரியர் என்னைத் தேடுவார். நடந்தே பள்ளிக்கு வருவதால் நானும் சுதாகரும் கொஞ்சம் சீக்கிரம் பள்ளிக்குப் போய்விடுவதால் ஆனந்தி ஆசிரியருக்கு அவருடைய புத்தகங்கள் தூக்கி வர உதவுவேன். இன்னும் முழுமையாக விடியாத அக்காலையிலும் ஆனந்தி ஆசிரியரின் வெள்ளை கார் பனிமூட்டத்தைப் போல பள்ளிக்குள் நுழையும். உடனே எனக்கும் சுதாகருக்கும் ஒரு போட்டித் தயாராகிவிடும். யார் முதலில் போய் ஆனந்தி ஆசிரியரின் காருக்குப் போய் சேர்வது என தலைத்தெறிக்க இருவரும் ஓடுவோம். பெரும்பாலான நேரத்தில் நான் தான் ஆசிரியரின் வலது கை. சுதாகர் தோற்றுவிடுவான். நாளை அவன் மட்டும் தான் போய் நிற்பான். ஆனந்தி ஆசிரியர் நிச்சயம் நான் எங்கே எனக் கேட்பார்.

சட்டென பூவிழியின் அழிப்பான் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. என் புத்தகப்பையைத் திறந்து உள்ளே கைவிட்டுத் துழாவினேன். இன்று காலையில் அவள் என்னிடம் கண்களைச் சிமிட்டி உதட்டைக் குவித்து கவனமாகக் கொடுத்த அழிப்பான். பூவிழி வகுப்பிலேயே கொஞ்சம் வசதியான மாணவி. எப்பொழுதும் புதிய பொருள்களே பயன்படுத்துவாள். இழுத்துச் செல்லும் புத்தகைப்பையை என் வகுப்பிலேயே முதன்முதலில் பாவிக்கத் துவங்கியது அவள்தான். அவள் பொருள்கள்தான் வகுப்பில் அடிக்கடி திருட்டுப் போகும். ஓய்வுக்குப் போய்வந்த பிறகு நிச்சயம் அவளுடைய ஒரு பொருள் காணாமல் போயிருக்கும், எங்களுக்குக் கேட்டு கேட்டு சலித்துப் போன ஒரு செய்தி அது.

“என் ஜாமான எடுத்தவன்… அவனைச் சாமி கண்ணெ குத்தும். இது சத்தியம்,” எனச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிடுவாள்.

அவ்வளவுத்தான். மறுநாள் புதிய பொருளுடன் வந்து நிற்பாள். நேற்று நடந்த திருட்டைப் பற்றி மறந்து புதிய பொருளைக் காணாமலடிக்கத் தயாராகிவிடுவாள். இது என்னவோ அவளுக்குப் பிடித்த அழிப்பான் என்றும் என்னிடம் கொடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ள சொன்னாள். நாளையும் இனியும் நான் அப்பள்ளிக்குப் போகப்போவதில்லை. அவள் நான் இந்த அழிப்பானைத் திருடிவிட்டேன் என உறுதியாக நம்புவாள். அன்றாடம் என்னைச் சாமி கண்ணைக் கொத்த வேண்டும் என அவள் வேண்டிக்கொள்வாள்.

கையில் பிடித்திருந்த அந்த அழிப்பானைத் தூக்கி வெளியே வீசினேன். அது சட்டென பார்வையிலிருந்து மறைந்து எங்கோ விழுந்தது. மூன்றாம் ஆண்டில் படிக்கும் தினேஸ் அன்றாடம் ஓய்வுக்கு என் வகுப்பிற்கு வந்துவிடுவான். என்னுடன் தான் சிற்றுண்டிச்சாலைக்கு வருவான். ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அவனைக் கிண்டல் செய்து அடிக்கிறார்கள் என்பதைப் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். அதனாலேயே அன்றாடம் என் பாதுகாப்பில் ஒரு ‘ரொட்டி சானாய்’ செலுத்திவிட்டுத்தான் வகுப்பிற்குப் போவான். நாளை அவன் எப்படிச் சாப்பிடுவான்? ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அவனை என்ன செய்வார்கள்? மறுநாளும் அவன் என்னைத் தேடி வகுப்பிற்கு வருவான்.

“டேய். உனக்கு மிலோ வேணுமா?”

அப்பாவின் குரல் கேட்டதும் எக்கிக் கீழே பார்த்தேன். லாரி ஏதோ ஒரு கடை முன்பு நின்றிருந்தது. தலையை மட்டும் ஆட்டினேன். புதிய இடம். சாலை பரப்பரப்பாக இருந்தது. மிலோவை அப்பா நெகிழிப் பையில் கட்டிக் கொடுத்தார். எடுத்து மெதுவாக உதட்டில் வைத்தேன். சூடாக இருந்தது.

  • ஆக்கம் கே.பாலமுருகன்

 

Share Button

About The Author

One Response so far.

  1. காந்தி முருகன் says:

    இச்சிறுகதை நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் நாவலின் பிரதியாகத்தான் பார்க்கத் தோண்றுகிறது. பத்து வருட இடைவெளியில் ஆசிரியர் நாவலின் கதைக்கருவை சிறுகதையில் மீண்டும் முனைந்துள்ளது. சமூகவியல் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லையென்பதைக் காட்டுகிறது.பேனா எழுதிமுடித்தவுடன் தன் ஓய்வைத் தேடவில்லை.வெளியான மையின் கடமை முடிந்துவிட்டதென எந்த எழுத்தாளனும் நினைப்பதில்லை. கடன்பட்டார் நெஞ்சத்தை நாவலின் மூலம் உணர்த்தியும் இன்னமும் மாறாத பல சூழல்கள் உள்ளன. சிறுகதையில் ஆசிரியர் சிறுவர் உளவியலாகக் கொண்டு வந்தது மிகவும் சிறப்பு. ஒரு இளஞ்சிட்டின் சுதந்திரம்,சின்ன சின்ன ஆசைகள்,கனவுகள் எப்படியெல்லாம் தொலைகின்றன என்பதை மிக யதார்த்தமாக சொன்ன ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் நீளமாக சிதைந்து வரும் சிறுவன் உளவியலை விவரித்திருக்கலாம்.