சிறுகதை: மண்டெ

 

PAINTINGSimage3

லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம் காட்டெ வந்தானா அவன் மோட்டரெ எரிச்சுருவாங்க. ஆள் மாட்டனா அடிச்சி தூக்கிக் காட்டுல போட்டுருவாங்க.

அதுல ஒரு மண்டையெ பாக்கத்தான் பெரிய ஆஸ்ப்பித்திரிக்கு வந்துருக்கென். ரோட்ல லாரிக்காரன் மோதிட்டு ஓடிட்டான். கஞ்சா பாவ் பண்றவனுக்கெல்லாம் இதான் கதின்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களும் பாக்கவே வரல. கேக்கப் போனென். வீட்டுல யாரும் இல்ல. சொந்தக்காரனுங்களும் யாரும் இல்ல. கூட்டாளிங்களுக்கும் தெரிஞ்சவனுங்களுக்கும் இருக்கறப்பல்லாம் கொடுத்துச்சி. கொடுத்து என்ன பண்ண? எல்லாம் கஞ்சா காசு. நிக்காது. பாவத்தையும் கழுவாதுன்னு லோரோங் 64ல்ல நிறைய சாபம்.

மேல, அஞ்சாம் நம்பர் வார்ட்டுல நுழைஞ்சோனே பாக்கலாம். மூஞ்சி கிழிஞ்சி அங்கங்க தைச்சிருப்பாங்க. ஒரு கால் இல்ல. எடுத்தாச்சு. டையர ஏத்திட்டானுங்க. வயிறு பொடைச்சிக்கிட்டு இருக்கும். அதுதான் அந்த லோரோங் 64 மண்டெ. ரோட்டு வாசல்லே மோட்டர நிப்பாட்டிட்டு எந்நேரமும் உட்காந்துக்கும். கூட ரெண்டு பேரு எப்பவும் இருப்பானுங்க. அந்த லோரோங்க்கு காவல் தெய்வம் மாதிரி அங்கேத்தான் எல்லாமே. பீர் போத்தல்லே குடும்பம் நடத்திட்டு விடியக்காலைல வீட்டுப் பக்கம் போகும்.

லோரோங் 64ல்ல அதுக்குன்னு ஒரு பயம் இருந்துச்சு. அதோட அப்பாவும் முன்ன அப்படித்தான். தூக்குல போட்டுட்டானுங்க. இதுவும் நாலு தடவ கேங் சண்டெ கேஸ்ல உள்ளப் போய்ட்டு வந்துருக்கு. யாரும் சொல்லித் தர்லெ. வீட்டுல ரத்தம் பாத்த வளப்பு. என்ன பண்றது?

“மண்டெ! மண்டெ! இப்ப எப்படி இருக்கு?”

மண்டைக்கிட்ட இருந்து பதிலே இல்ல. அப்படியே மல்லாக்க பாத்துக்கிட்டு மூச்சை இழுத்துப் பிடிச்சி சுவாசிச்சிக்கிட்டு இருந்துச்சி. உள்ள போய்ட்டு மீண்டும் வெளில வர்ற காத்து திணறிக்கிட்டு இருந்துச்சி. கண்ணு ரெண்டும் உள்ள போயிருச்சி. ஓரக் கட்டில். சன்னலுக்கு வெளியெ வெளிச்சம் அதோட மூஞ்சில பட்டு சுத்தம் செஞ்சிக்கிட்டு இருந்துச்சி. பச்சை உடுப்பு போட்டுருக்கு. ஆஸ்பித்திரி உடுப்பு அதுக்குப் பத்தல. பாவம். பெரிய உடம்பு, இன்னும் உப்பிருச்சி வேற. முட்டிக்குக் கீழ கொஞ்சம்தான். இல்லாத காலு மனசுல துருத்திக்கிட்டு இருந்துச்சி. போர்வையெ இழுத்து மூடிட்டேன். முட்டிக் கிழிஞ்ச ஜீன்ஸோட மண்டெய பாத்த ஞாபகம். மனசுக்கு முடிலெ.

‘ஸ்ட்ரோக்’ வரலாம்னு சொல்லிட்டாங்க. பக்கத்து படுக்கைல இருந்த மலாய்க்கார தாத்தா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மண்டெ மோட்டர்ல ஜம்முன்னு தெறிக்கற காட்சி மனசுல வந்துட்டு வந்துட்டுப் போய்க்கிட்டு இருந்துச்சி.

“மண்டெ? மண்டெ விளங்குதா?”

மூச்சு மட்டும் சீரா இல்லாம திணறுனுச்சி. முகத்துல உயிரெ இல்ல. வெறும் உடம்பு. அசையாத அந்த உடம்பெ ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருக்கென். மேட்டு வீட்டுல உள்ள சிவாவெ தனியாளா தூக்கிட்டு வந்து லோரோங் 64ல்ல வச்சு அடிச்சி ரோட்டுல போட்டு மூஞ்செ தேய்க்கும்போது மண்டைக்கு நிகர் மண்டைத்தான்னு பேசிக்கிட்டாங்க.

மண்டெ காடி திருட்டு, கஞ்சா, ஆளைக் கடத்துறதுன்னு மும்முரமா இருந்தப்பத்தான் இந்தப் பெரச்சன. சிகரேட் வாங்க நிப்பாட்டிருக்கு. போன் அடிச்சிருக்கு. பேசிக்கிட்டெ ரோட்டு ஓரத்துல நிண்டுருச்சி. அது லோரி ஒதுங்கர வலவு. சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியாது. சின்ன லோரோங்.

மண்டென்னு இருந்த பேரு ‘கஞ்சா மண்டென்னு’ மாறி எல்லாத்துக்கும் பழகிடுச்சு. ஆனா, நான் மண்டென்னுத்தான் கூப்டுவேன். அப்பா செத்துப் போனப்ப ரோட்டுல நிண்டென். மண்டெத்தான் கூட்டிப்போய் சீனன் கடையில வேல வாங்கிக் கொடுத்துச்சி. வேற ஒன்னும் தெரியாது. எடுப்பிடி வேலயும் கொஞ்சம் செஞ்சென். அப்ப்ப்ப காசு இல்லன்னு சொன்னா பாக்கேட்டுல அஞ்சு பத்து திணிக்கும். சூருல சிவந்த கண்ணு அதுக்கு. அழுந்த கண்ணு. ஆனா, மண்டெ அழுந்ததெ இல்ல. போலிஸ்ல வச்சு அடிச்சி பாதி உயிர் உடம்புல இல்ல. நெஞ்செ நிமித்திக்கிட்டு நிக்கும். பயப்படாது. ஆனா, இப்ப சொத்த உடம்பா போச்சு. காலும் இல்ல. கையும் நரம்பு பிச்சிக்கிச்சாம்.

“மண்டெ! மண்டெ! நான் பேசறது கேக்குதா?”

பதிலே இல்ல. அது போட்டுருந்த ஜீன்ஸ் மடிச்சி ஒரு பிளாஸ்டிக் பைல கட்டி வச்சிருந்தாங்க.

“யாரும் பாக்க வந்தாங்களா?”

பக்கத்து படுக்கையில இருந்தவரு இல்லைன்னு தலைய மட்டும் ஆட்டனாரு. அதுக்குமேல அங்க இருக்க பிடிக்கல. கீழ இறங்கிட்டென். மண்டெ எங்கன்னு யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைக்கும்போது மனசு பிச்சிக்கிட்டுப் போலாம்னு தோணுச்சி. விருவிருன்னு நடந்தென்.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.