சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு

12666478_581870011960569_1064063615_n

தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்?

கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர் எளிமையான பயிற்சி நூல் தயாரித்து வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆண்டு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணித்த அனுபவத்தினூடாக ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒரு தேடல் எப்பொழுதும் சுடர் விட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவர்களின் கேள்விகளும் ஆர்வமுமே அதனைப் பிரதிபலித்தது. ஆகையால், சுடர் என்ற ஒரு சொல் எனக்குள் இருந்து வெளிப்பட்டது.

தினகரன்: ஏன் சுடர் நூலை இலவசமாக வழங்கினீர்கள்?

கே.பாலமுருகன்: உள்அரசியலே இல்லாமல் முழுக்க சுடர் பயிற்சி நூலை இலவசமாகப் பல பள்ளிகளுக்கு வழங்கினேன். பல மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், யூ.பி.எஸ்.ஆர் இறுதிநேரப் பயிற்சிக்கு அந்நூல் பங்களிப்பு செய்ததைத் தெரிவித்திருந்தார்கள். எல்லா மாணவர்களுக்கும் பயிற்சி நூல்களை வாங்கும் சக்தி இல்லை. அதனால்தான் முதலில் அத்திட்டம் உதித்தது.

தினகரன்: சுடர் மற்ற பயிற்சி நூல்களுக்குப் போட்டியாக இருக்கிறதா?

கே.பாலமுருகன்: யாரும் யாருக்கும் போட்டியில்லை என்பது உண்மை. நான் ஒரு பயிற்சி நூலை எழுதும்போது இது யாருகெல்லாம் போட்டியாகும் என்ற தயக்கத்தில் சூழ்ந்து கொண்டால், எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்க முடியாது. இந்த நூல் எனக்குப் போட்டி; அந்த நூல் எனக்குப் போட்டி எனச் சொல்வதே ஒரு வகையான பிதற்றல்தான். ஆரோக்கியமான சூழல் என்பது மனமுவந்து பிறர் கேட்கும்போது தன் வெளியீட்டை விற்பதற்காகப் பிற நூல்களை இழிவாகப் பேசுவதை விடவேண்டும். அத்தகைய மனநிலையுடன் எதைச் செய்தாலும் அது தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்வதாகப் போய்விடும். ஆகையால், விற்பனையில் இருக்கும் மற்ற நூல்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு நம் நூலை எப்படி மேலும் தரமாகக் கொண்டு வர முடியும் என்பதைப் பற்றியே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தினகரன்: விரைவில் வெளியிடப்படவிருக்கும் சுடர் கருத்துணர்தல் நூலைப் பற்றி சொல்லுங்கள்.

கே.பாலமுருகன்: ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை கல்வி அமைச்சின் பாடநூலைத் துணையாகக் கொண்டு நாட்டு நடப்பு, தமிழறிஞர்கள், அறிவியல், வரலாறு, உள்நாட்டுக் கலைஞர்கள் எனப் பல கோணங்களில் மாணவர்களின் கற்றல் தரங்களை வளர்ப்பதற்காக மிகுந்த கவனத்துடன் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த ஐந்து முழுமையான பயிற்றிகளும், 120க்கும் மேற்பட்ட பல்வகை தூண்டல் பகுதிகளுடன் கேள்விகளும், அதற்கேற்ற விடைகள் இணைப்புடனும் இந்தப் பயிற்சி நூல் தயாராகியுள்ளது. முந்தைய குறைகளைக் கவனமாகக் களைந்து, புதிய பொலிவுடன் உருவாக்கப்பட்ட நூல் இது. நிச்சயம் 4,5,& 6 ஆம் ஆண்டு மாணவர்களை யூ.பி.எஸ்.ஆர் சோதனையை நோக்கி சிறப்பாகத் தயார்ப்படுத்தும்.

தினகரன்: சுடர் கருத்துணர்தல் நூலிலேயே மாணவர்கள் பயிற்சிகள் செய்ய முடியுமா?

கே.பாலமுருகன்: ஆமாம். அதற்குத்தானே பயிற்சி நூல் என்கிறோம். பயிற்சி நூலில் பயிற்சி செய்யாமல் வேறெங்கு செய்வது? அதற்குரிய இடத்தைக் கச்சிதமாக நூலிலேயே தயார் செய்துள்ளோம். விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிற்சியைச் செய்துவிட்டு விடையைச் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

 

தினகரன்: இந்த நூலின் விலை நியாயமானதாக இருக்குமா?

கே.பாலமுருகன்: சேவை என்கிற பெயரில் குறைந்த சென்க்கு நூலை அச்சிட்டுவிட்டு அண்டா விலைக்கு எதையும் விற்கும் நோக்கம் சுடர் பதிப்பகத்திற்கு இல்லை. மாணவர்களால் செலுத்த முடிந்த தொகையைக் கவனத்தில் கொண்டே இப்பயிற்சி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு விலைக்குப் பின்னே நூல் எழுதியவரின் உழைப்பு, நூலை விற்கக் கொண்டு போகும் விற்பனையாளர்களின் உழைப்பு, நூலைத் தன் சொந்த பணம் போட்டு அச்சிட்டவர்களின் உழைப்பு எனப் பலரின் உழைப்புகள் அடங்கியுள்ளது. ஒரு நூலில் விலையை வெறுமனே நூலின் விலையாக மட்டுமே பார்க்க இயலாது.

தினகரன்: இப்பயிற்சி நூலை வாங்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கே.பாலமுருகன்: சுடர் பதிப்பகத்தை நாடி பள்ளி மாணவர்களுக்கான பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். சுடர் பதிப்பகமே விற்பனை உரிமையைப் பெற்றுள்ளது. நான் எந்தப் பயிற்சி நூலையும் நேரடியாக விற்பனை செய்யவில்லை. ஆகவே, அவர்களைத் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.( சுடர் பதிப்பகம்: 0162525436)

தினகரன்: சுடர் கட்டுரை நூல் வெற்றியை அடுத்து மாணவர்களுக்கு மீண்டும் இலவச நூல் வெளியாக்கும் திட்டமுண்டா?

கே.பாலமுருகன்: நிச்சயம் சுடர் ஒவ்வொரு வருடமும் இலவசமாக வெளியிடப்பட்டு ஏழை மாணவர்களுக்கும், சிறிய பள்ளிகளுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இப்பணியை நான் தொடர்ந்து செய்வேன். நானும் தமிழ்ப்பள்ளியின் ஓர் அங்கம்தான்.

தினகரன்: சுடர் கருத்துணர்தல் பற்றி பொதுவான விளக்கம் என்ன?

கே.பாலமுருகன்: பாடநூலில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணம், செய்யுளும் மொழியணிகளும் அடிப்படையிலான புறவயக் கேள்விகளும், பல்வகை தூண்டல் பகுதிகளின் அடிப்படையிலான அகவயக் கேள்விகளும் அடங்கியதுதான் கருத்துணர்தல் பகுதியாகும். சிந்திக்கும் திறனையும் நினைவுக்கூறும் ஆற்றலையும் இப்பகுதியில் வளர்க்க முடியும். அதனைக் கருத்தில் கொண்டு, கவிஞர் அமரர் பா.அ.சிவம், கவிஞர் அமரர் காரைக்கிழார், தமிழறிஞர் அமரர் ஐயா சீனி நைனா முகம்மது என தமிழ்த்துறையில் சாதித்தவர்களையும், அதே போல விளையாட்டுத் துறையும், கலைத்துறையிலும் சாதித்த என்றும் நினைவில் நிலைத்திருக்கும் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையைத் தூண்டல் பகுதிகளாகக் கொண்டு கேள்விகள் அமைத்துள்ளேன். அதே போல நாட்டு நடப்பை ஆராயும் வகையில், டிங்கிக் காய்ச்சல், மருத்துவ ஆலோசனைகள், மாணவர் முழுக்கம், மக்கள் தொலைக்காட்சி, என பொது அறிவு சார்ந்த தூண்டல் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளும், சிறுவர்களை மையமாகக் கொண்டிருக்கும் சிறுகதைகளும், இரண்டு முக்கியமான நாடகங்களும் இப்பயிற்சி நூலில் இடம்பெற செய்துள்ளேன்.

தினகரன்: உங்களின் நன்முயற்சியான சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூல் மாணவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கி உங்களுக்கும் பெருமை சேர்க்கும் என எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

 

Share Button

About The Author

Comments are closed.