நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1

சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி, வர்ணம், வசனம், திரைக்கதை, கதை, இயக்கம், பின்னணி இசை என பலவற்றை கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை உலக சினிமாக்களின் வழியும் சினிமா சார்ந்த நூல்களின் வழியும் பழகிக் கொண்டேன். ஒரு சினிமாவை அதன் கலாச்சாரப் பின்னணியோடும் அந்நாட்டின் அரசியல் சூழலோடும், கலை வெளிபாடுகளுடனும் இணைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சிக்கும் நிலையே சினிமாவில் நான் கண்டைடைந்த இடம். என் இரசனை பலருக்குப் பொருந்தாமலும் போகக்கூடும். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நல்ல சினிமாக்களைப் பற்றி உரையாடிக் கொண்டுத்தான் இருக்கிறேன். அவ்வரிசையில் 2015ஆம் ஆண்டில் வெளிவந்த மொத்தம் 197 தமிழ்ப்படங்களில் தீவிரமான/ ஒரு சில சிறப்பம்சங்களால் கவனிக்கப்பட்ட 16 சினிமாக்களின் பெயர்களை முதலில் மீட்டுணர்வோம். இப்படங்களில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து மகிழுங்கள்; சிந்தியுங்கள்.

இந்த வரிசை தரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல: படங்கள் வெளியான மாத அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

  1. எனக்குள் ஒருவன்மார்ச் 6

Enakkul-Oruvan_B (1)

சித்தார்த் நடித்திருந்த இப்படத்தை பிரசாத் இயக்கியிருந்தார். கிறிஸ்த்தப்பர் நோலனின்  ‘இன்செப்ஷன்’ படத்தைப் போன்று மனித கனவுகளை வித்தியாசமான திரைக்கதையின் வழி படம் சொல்கிறது. வித்தியாசம் என்றாலே பெரும்பாலும் வழக்கமான தமிழ் சினிமா இரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது என்பது ஒரு சாபக்கேடு. ஆகையால், இப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடவில்லை; மக்களின் கவனத்தையும் பெறவில்லை. பெரும்பாலான பேரும் அதன் திரைக்கதை நகர்ச்சி குழப்பத்தை உண்டாக்குவதாகச் சொல்லிக் கேட்டேன். ஆனால், முற்றிலும் ஒரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் வெற்றி படமாக அமைந்திருக்கும்.

 

  1. ராஜ தந்திரம்மார்ச் 13

12-1426156476-rajathanthiramreview

புதுமுக இயக்கங்களை நம்பி அமித் இயக்கிய இப்படம் 2015ஆம் ஆண்டின் சிறந்த முயற்சி என்றே பாராட்டலாம். நாம் நினைக்கும் சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருக்கும் மூன்று திருடர்களைப் பற்றிய கதையாகும். திரைக்கதை நகர்ச்சி சமரசமின்றி இருந்தாலும் எங்கேயும் சோர்வூட்டாமல் உருவாக்கப்பட்டிருந்தது. வீரா கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் கௌதம் இயக்கத்தில் நடுநிசி நாய்கள் எனும் படத்தில் நடித்தவர். கதைக்குப் பொருந்தி வெளிப்பட்டுள்ளார்.

 

  1. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுஏப்ரல் 10

Chennai-Ungalai-Anbudan-Varaverkirathu

போபி சிம்ஹா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கிய இப்படம் மிகவும் கவனத்திற்குரிய படமாகும். அது கையாண்டுள்ள கதைக்களம் கவனிக்கப்படாத மென்ஷன் வாசிகளின் துயரங்கள் ஆகும். படுக்க இடமில்லாமல் இரவு முழுவதும் அலையும் ஓர் இளைஞனின் வாழ்க்கைக்குள்ளிருந்து எழும் குரல். அவ்வகையில் கடந்தாண்டின் கணமான கதையுடன் வெளிவந்த படமாக இப்படத்தைக் கருதுகிறேன்.

 

  1. உத்தம வில்லன்மே 2

Actor Kamal Haasan in Uttama Villain Movie Stills

கமல் நடித்திருந்த இப்படத்தை ரமேஸ் அரவிந்த் இயக்கியிருந்தார். 2015ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்ல கதையம்சம் கொண்டிருந்தாலும் வெற்றிபெறாத படங்களில் ஒன்றாகப் போய்விட்டது. சாவை எதிர்க்கொள்ளும் கலைஞனின் இறுதி நாட்கள்தான் படம். இப்படமும் பலருக்குப் புரியவில்லை எனத் தெரிவித்திருந்தார்கள். அப்படிப் புரியாமல் போகும் அளவுக்குத் திரைக்கதையிலும் குழப்பங்கள் இல்லை. கமல் இப்படத்தில் நடிகனாகவே வந்துள்ளார். மரணத்தைப் பற்றி கடந்தாண்டில் தத்துவப்பூர்வமாக விவாதித்த ஒரு யதார்த்த சினிமா ‘உத்தம வில்லன்’ ஆகும்.

 

  1. 36 வயதினிலேமே 15

36-Vayathinile-songs

ரோஷன் இயக்கத்தில் ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு முதன்மைக் கதைப்பாத்திரத்தை ஏற்று நடித்தப் படமாகும். அவருடைய வருகைக்காவே படம் நன்றாக ஓடியது எனலாம். கணமான கதையாக இல்லாவிட்டாலும் 36 வயதை எட்டும் பெண்கள் மீது சமூகம் கொண்டிருக்கும் பழமைவாதங்களையும், குடும்பங்களில் வைத்து ஒடுக்கப்பட்டு திறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போன பெண்களின் எழுச்சிக் குரலாகவும் இப்படம் இருந்ததால் அதன் முயற்சியைப் பாராட்டியே எனது திவீர சினிமாவின் பட்டியலில் சேர்க்கிறேன். சந்தோஷ் நாராயணின் இசை இப்படத்திற்கு மிகுந்த பலம் என்றே சொல்லலாம். தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இசை அது.

 

  1. காக்கா முட்டைஜூன் 5

kakka-muttai-movie-poster_142744642300

எம் மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ் என்கிற இரண்டு சிறுவர்கள் நடித்துப் பல விருதுகளை வென்ற படமாகும். உலகமயமாக்கல் எப்படி அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களையும் அவர்களின் மூளைகளையும் பாதிக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதையாகும். படம் சொல்லப்பட்ட விசயங்களில் கொஞ்சம் மிகையதார்த்தங்கள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதையும் கதைக்களமும் கமர்சியல் சினிமாக்கள் கண்டுக்கொள்ளாதவையாகும். ஆனாலும், காக்கா முட்டை ஆபத்தான அரசியல் பின்புலம் கொண்ட படமும் ஆகும். அதைப் பற்றி விரிவாகப் பேசலாம்தான். இருப்பினும், பல இடங்களில் காக்கா முட்டை மிக முக்கியமான படமாக நிற்கிறது.

 

  1. இன்று நேற்று நாளைஜூன் 19

Indru-Netru-Naalai2

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு நடித்திருந்த இப்படம் இவ்வாண்டில் தமிழ் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் காலம் குறித்த பிரக்ஞையையும் பல அற்புதமான தருணங்களையும் உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். சலிப்பூட்டாத அதன் திரைக்கதையின் பலத்தாலே இப்படம் மக்கள் மனத்தில் சீக்கிரமே இடம் பிடித்தது. விஷ்ணுவின் நடிப்பும் கருணாவின் இயல்பான நகைச்சுவையும் திகில்கள் நிறைந்த திரைக்கதையும், அதன் ஊடாக நகரும் காலத்தைத் தாண்டி வாழ முடியாத சிக்கல்களையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படமாகும். இதைக் கமர்சியல் சினிமா என ஒதுக்கிவிடலாமா அல்லது தீவிர சினிமா என்று அடையாளப்படுத்தலாமா என்கிற குழப்பத்தினூடாகவே இப்பட்டியலில் இந்தப் படத்தையும் இணைக்கிறேன்.

 

  1. பாபநாசம்ஜூலை 3

Papanasam2

ஜீத்து ஜோசப் என்கிற மலையாள இயக்குனரின் படம். தமிழில் மீண்டும் அவராலே எடுக்கப்பட்டது. கமல் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கக்கூடிய அத்தனை பலமான கதையும் திரைக்கதையும் கொண்ட படமாகும். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கதாநாயகன் கமல் அல்ல; ஜித்து ஜோசப் தான். ஒரு குடும்பம் தன் கௌரத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை ஆபத்தான முறையில் செயல்பட்டு கடைசிவரை பிடிவாதமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது என்பதுதான் கதையாகும். ஆனால், அதனைத் திரைக்கதையாக்கிய விதம் அற்புதமான உழைப்பு. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படமாகத் திகழ்ந்தது.

தொடரும்

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.