எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?

 

சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள் சிரிக்கவே மறந்திருந்தார். ஒருமுறை கூட அவர் எதற்காகவும் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுது வாழ்க்கை அவரிடமிருந்து சிரிப்பைப் பிடுங்கியிருக்கும் என்பதை அறியவே முடியவில்லை. எந்தச் சூழல், எந்தத் தருணம், எந்தச் சம்பவம் அவர் சிரிப்பை வெறுக்கக் காரணமாக இருந்திருக்கும் எனத் தெரியாமலே போய்விட்டது.

4803151863_7e79782221

‘சிரிப்போம் வாருங்கள், சிந்திப்போம் வாருங்கள்’ என்ற ஒரு நிகழ்ச்சிக்காகச் சமீபத்தில் வேறு ஒரு காரணத்திற்காகப் போயிருந்தேன். நுழைவு கட்டணம் 30 ரிங்கிட். நிகழ்ச்சியில் பிரபலமான ஒரு பேச்சாளர் வந்திருந்தார். ஆங்காங்கே கொஞ்சம் வடிவேலுவின் நடையையும், கணவன் மனைவி குறித்தான கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் எதற்காகவோ அம்மண்டபத்தைவிட்டு வெளியே வந்தார். சட்டென அவர் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போனது. மீண்டும் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு யாரிடமோ கத்திப் பேசிக்கொண்டிருந்தார். வெளியே இருந்த என்னை எதிர்க்கொண்ட போதும் அவரிடம் சிரிப்பு இல்லை. மீண்டும் உள்ளே சென்றதும் சிரிக்கத் துவங்கினார். இச்சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அவரிடமிருந்து சிரிப்பை வரவழைக்க அவரிடமே 30 ரிங்கிட் வாங்க வேண்டியிருக்கிறது.

30 வெள்ளிப் பணம் செலுத்திவிட்டு வயிறு வலிக்கச் சிரித்துவிட்டு மீண்டும் தன் பழைய வாழ்க்கைகுள் நுழைந்து கொள்ளவே எல்லோரும் விருப்பப்படுகிறார்கள். வாழ்க்கையின் மிக வேகமான ஒரு சக்கரத்திற்குள் மாட்டிக் கொண்டவரகள் எப்பொழுது  உண்மையாகச் சிரித்திருப்பார்கள்? அப்படிச் சிரிப்பவர்களின் சிரிப்பு எப்படி இருக்கும்? தெரியவில்லை. ஆனால், ஏதோ சிரிப்பு வரும்போது சத்தமாகச் சிரிக்கப் பல நேரம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சத்தமான சிரிப்பு குறிக்கோளை முதுகில் கட்டிக் கொண்டு ஓடுபவர்களின் தியானத்தைக் களைத்துவிடுகிறது. சிரிக்கத் தெரியாதவர்களின் கோபத்தைக் கிளறுகிறது; சிரிப்பதற்கும் நடத்தைக்கும் தொடர்பிருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் எரிச்சலை அதிகப்படுத்துகிறது; எதிரிகளின் பொறாமைகளைத் தூண்டுகிறது. சிரிப்பது அத்தனை பெரிய குற்றமாக விரிந்து நிற்கிறது.

ஒருமுறை, பரீட்சை மண்டபத்தில் சிரிப்பு வந்துவிட்டது. அப்பொழுது நான் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட்டு வகுப்பில் திட்டு வாங்கிய ஒரு நண்பனின் நினைப்பு அப்பொழுது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்த நினைப்பு எப்பொழுது வந்தாலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. சிரிப்பதற்கான நரம்பு மண்டலம் ஏதாவது உடலில் இருந்தால் நிச்சயம் அந்த நரம்பிலிருந்து அந்த ஆப்பிள் சம்பவத்தை அறுவை சிகிச்சை செய்து எடுக்கச் சொல்லிவிட்டிருப்பேன். அமைதியான ஒரு சூழலில் வெடி சிரிப்பைக் கேட்டதுண்டா? அன்று எல்லோரும் கேட்டு அதிர்ந்துவிட்டார்கள். பிறகென்ன? சிரிப்புப் பிறரிடம் தண்டனை பெறச் செய்யும் எனத் தெரிந்து கொண்டேன்.

அம்மா எனக்கு 10 வயது இருக்கும்போது சீனனைக் கல்லெறிந்தற்காக ஏசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய முகம் கொஞ்சம் நகைச்சுவையாக இருந்ததற்கு நான் என்ன செய்ய முடியும்? அம்மாவிற்குக் கோபப்படவே தெரியாது. அப்படி அவர் கோபப்பட்டாலும் அது பொய்யாகவே இருக்கும். எங்கே நான் சேட்டைகளைத் திரும்பி செய்துவிடுவேன் என்ற பயத்திலேயே பொய்யாகக் கோபப்படுவார். அல்லது அப்பாவிடம் அடிவிழும் எனப் பயந்து அதற்கு முன்னாலேயே அவர் கடுமையாக நடந்து கொள்வதைப் போல நடிப்பார். அப்படி அன்று அம்மா ஏசும்பொழுது எனக்கு சிரிப்பு மட்டுமே வந்தது. தரையில் விழுந்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தேன். அப்பொழுது சட்டென நடு முதுகில் விழுந்த அடியை இன்னும் மறக்க முடியவில்லை. என் பெரிய அக்கா. அம்மா சொல்வதைக் கேட்காமல் அப்படி என்ன சிரிப்பு எனக் கடிந்து கொண்டார். சிரிப்பது தவறென உரைத்தது.

யாராவது தீவிரமாக நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும்போது சிரிப்பு வந்தால் எப்படி இருக்கும்? அதுவொரு பயங்கரமான இக்கட்டான நிலை. சிரிப்பைச் சமாளிக்க முடியாமல் உதட்டின் வழியாகக் கசிந்து சிரித்துவிடும்போது அவர்கள் நம்மிடமிருந்து நட்பை முறித்துக் கொள்வதும் நடந்துள்ளது. ஆகவே, அறிவுரை கேட்கும்போது சிரிக்கக்கூடாது. சமூகத்தில் இப்படிச் சிரிக்கக்கூடாது என்பதற்குப் பல விதிகள் உண்டு. இப்படிப்பட்ட சிரிக்கக்கூடாது என்பதற்காக விதிகள் நிரம்பிய சமூகத்தில் எப்படி ஒரு மனிதன் சிரிப்பான்? பணம் கொடுத்து ஓர் அரங்கை நோக்கி சிரித்துவிட்டு வந்துவிடுகிறான். அல்லது பலநாள் அடக்கப்பட்ட தன் சிரிப்பை ஏதோ ஒரு சினிமாவின் மூலம் சிரித்து வெடித்து வெளிப்படுத்துகிறான். அது ஒரு சாதாரண காட்சியாகக்கூட இருக்கலாம்.

32d4349e0df97a29b0aa6cf5065efde7

எதார்த்தமான சம்பவங்களை நினைத்து சிரித்த காலம் போய், சிரிப்பதற்காக ஒரு சம்பவத்தை உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். முகம் தெரியாதவர்களிடம் நம் சிரிப்பைச் செலவு செய்ததில்லை. எதிரில் வரும் ஒருவரிம் சிரிக்கத் தயங்குகிறோம். சிரிப்பைச் சேமித்து சேமித்து அது உள்ளுக்குள் பெருகி வழிந்து கரைந்தும் விடுகிறது. 1906 ஆம் ஆண்டில் ‘ப்ரேட் கார்னோ’ நகைச்சுவை நிறுவனத்தில் சார்லி சாப்லின் சேரும்போது வாழ்க்கையில் வெறும் தோல்விவையை மட்டுமே ருசித்தவராக இருந்தார். நடிகனாக வேண்டும் என்ற அவருடைய ஆசை சிதைந்த தருணத்திலிருந்து நகைச்சுவையை ஏற்கிறார். அத்தனை வலிகளுடன் ஏழ்மையின் தகிப்பை சுகித்தப்படி மேடையில் ஏறி அத்தனை பேரையும் சிரிக்க வைக்கிறார். சிரிப்பு ஓர் ஆன்மீகமல்லவா? அதை ஏன் வெறுக்கிறோம்? நமக்குள் ஒரு சார்லி சாப்லின் இருக்கிறான். எந்தச் சோகத்திலும் சிரிக்கத் தெரிந்தவன். அவனைக் கொன்று விடாதீர்கள்.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.